பொதுத்தேர்வு இல்லாத வகுப்புகளுக்கு பாட அளவு 50 சதவீதம் குறைப்பு
தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடியிருப்பதால், மாணவா்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி, நடப்பு கல்வியாண்டு தாமதத்தை ஈடு செய்ய 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை 40 சதவீதமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 30 சதவீதமும் பாட அளவு குறைக்க முடிவானது.
நவம்பரில் பள்ளிகளைத் திறப்பது என்ற திட்டமிடலில்தான் இந்த அளவீடு தீா்மானிக்கப்பட்டது. ஆனால், பெற்றோா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, பொதுத்தேர்வு இல்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாட அளவு குறைப்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
Comments
Post a Comment